தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை: தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் கைது; செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்

சென்னை: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, திருச்சி, தஞ்சை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைநடத்தினர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததைசென்னை போலீஸார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் துப்பு துலக்கினர்.

இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வந்ததும், அதில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும் தெரியவந்தது. ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிறும் கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.



இதுதொடர்பாக சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஹமீது உசேன், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை கைது செய்தனர். கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்த ஹமீது உசேன்,அதை விட்டுவிட்டு, ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்க ஆதரவாக செயல்பட்டுவந்தார் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்டது. முதல்கட்டமாக, ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள குடியிருப்பு, தாம்பரம் அடுத்தமுடிச்சூர் இபி காலனி பகுதியில் உள்ள கபீர் அகமது வீடு, ஈரோடுபெரியார் நகர் அடுத்த கருப்பண்ணசாமி கோயில் வீதியில் உள்ள மெக்கானிக் முகமது இசாக் வீடு, ஈரோடு பூந்துறை ரோடு அசோக் நகர் 6-வது வீதியில் உள்ள சர்புதீன்வீடு, தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது வீடு, தஞ்சாவூர் அடுத்த மானாங்கோரையில் உள்ளஷேக் அலாவுதீன் வீடு, புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்தமண்டையூர் வடகாட்டில் ரபிபுல்லா என்பவரது பண்ணை வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஜமால்முகமது என்பவரது வீட்டில்தங்கியிருந்த தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்தஅப்துல் ரகுமானிடம் அதிகாரிகள்விசாரணை நடத்தினர். பின்னர், அவரை சாலியமங்கலம் அழைத்துசென்று அவரது வீடு, முஜிபுர் ரகுமான் என்பவரது வீடுகளில் சோதனைநடத்தினர். பின்னர், அப்துல் ரகுமான்(26), முஜிபுர் ரகுமான்(45) ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

சோதனையில், செல்போன், சிம்கார்டு, பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் தீவிரவாத இயக்கம்

சென்னை: பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப்- உத்-தஹ்ரிர்’ தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆள்சேர்ப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 5 மாவட்டங்களில் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்ப்- உத்-தஹ்ரிர் இயக்கத்தின் நிறுவனரான தகி அல் தின் அல்நபானியின் கொள்கைகளை அரசியல் சட்டமாக நிறுவி, மத நாடாக உருவாக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

இதனால், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் நீதித் துறை, சட்டங்கள் ஆகியவை தங்கள் மதத்துக்கு எதிரானவை என்ற கருத்தை பரப்பி இளைஞர்களை மூளைச் சலவை செய்து வந்துள்ளனர். இதற்காக பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்தே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது என என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது. நேற்று 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஈரோட்டை சேர்ந்த சர்புதீனை வரும் 7-ம் தேதி சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.