“படிக்கச் சொல்கிறது பாமக… குடிக்கச் சொல்கிறது திமுக!” – விக்கிரவாண்டியில் ராமதாஸ் பிரச்சாரம்

விழுப்புரம்: “நாங்கள் படிக்கச் சொல்கிறோம். திமுக குடிக்கச் சொல்கிறது,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “நாங்க படிங்க, படிங்க என்கிறோம். அவங்க குடிங்க, குடிங்க என்கிறார்கள். அவர்கள் வாக்குக்கு கொடுக்கும் பணம். அதை வாங்கிக் கொண்டு மாம்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். பெண்கள் மெஜாரிட்டி ஆண்கள் மைனாரிட்டி. பெண்கள் நினைத்தால் அரசை மாற்றி வீட்டுக்கு அனுப்பமுடியும். கருணாபுரம் உருவாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். டாஸ்மாக் கடை இல்லாமல் சந்து கடைகள் மூலமாக கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நீங்கள் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் எந்தெந்த சாதியில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது தெரிந்துவிடும். தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் பாளையங்கோட்டை சிறையில் மட்டும்தான் அடைக்கப்படவில்லை.



சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது என்னுடன் 1 லட்சம் கொசுக்கள் வசித்தது. நான் சிறை சென்றது உங்களுக்காக மட்டுமே. பெண் குழந்தைகளை பெண் என்று சொல்லாதீர்கள் பெண் தெய்வம் என்று அழையுங்கள். பெண்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ரூ. 2000 கொடுத்தால் போதாது என்று நீங்கள் கூறினால் அவர்கள் குறைந்தது ரூ.5000, ரூ.10,000 கேட்டாலும் கொடுப்பார்கள். ஏனெனில் அப்பணம் மது வருவாய் மூலம் அவர்களுக்கே வரும் என்று தெரியும்” என்று அவர் பேசினார். இக்கூட்டத்தில் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, மாவட்டத்தலைவர் புகழேந்தி, மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.