டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி… எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?

India National Cricket Team: 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது, இது இந்திய அணிக்கு இரண்டாவது கோப்பையாகும்.

இதற்கு முன் மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மட்டுமே 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தன. மேலும், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 1 முறை தொடரை வென்றுள்ளன. மேலும், 2024 டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் ஒரு தோல்வியை கூட அடையாமல் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடரில் ஒரு தோல்விக்கூட இல்லாமல் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. 

மூத்த வீரர்கள் ஓய்வு அறிவிப்பு

2007ஆண்டுக்கு பிறகு, அதாவது 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. அதுமட்டுமின்றி, சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. மேலும் 37 வயதில் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் அதிக வயதில் டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய கையோடு ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகிய மூன்று சீனியர்களும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

புயலால் சிக்கிய இந்திய வீரர்கள்

கடந்த சனிக்கிழமையே இறுதிப்போட்டி நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்திய அணி நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் காரணமாக அந்நாட்டு அரசு விமான நிலையத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர். அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்திய அணி பார்படாஸில் இருந்து புறப்படுவது.

பெரில் என பெயரிடப்பட்ட இந்த புயலானது பார்படாஸில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மிகத் தீவிரமாக மாறாததால் அங்குள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளது. தற்போது ஜமைக்கா நாட்டை நோக்கி அந்த புயல் நகர்வதாகவும், ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 

எப்போது வருகிறது இந்திய அணி?

அந்த வகையில், இந்திய அணி இன்னும் கோப்பையுடன் பார்படாஸ் நகரிலேயே சிக்கிவிட்டது. இந்திய அணி எப்போது நாடு திரும்பும் என அவர்களை வரவேற்க கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் எனலாம். இந்நிலையில், இந்திய அணி எப்போது நாடு திரும்பும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. முன்னதாக இன்று மாலை இந்திய அணி நாடு திரும்பும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா நேற்றிரவு அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இருப்பினும் அதில் இன்னும் கால தாமதமாகும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பார்த்தோமானால், இந்திய நேரப்படி புதன்கிழமை காலையில் புறப்படும் இந்திய அணி, வியாழக்கிழமை காலையில் இந்தியா வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

3 பேர் நீக்கம்… ஏன்?

மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட வேறு 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சென்றுவிட்டது. இருப்பினும், அதில் அறிவிக்கப்பட்டிருந்த ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தூபே ஆகியோர் முதலிரண்டு போட்டிகளில் நீக்கப்பட்டு சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா, ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தூபே ஆகியோர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியோடு பார்படாஸில் சிக்கி உள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க |  இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா? – பரபரப்பு தகவல்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.