முற்றிய முட்டல் மோதல்; கோவையைத் தொடர்ந்து நெல்லையிலும் மேயர் ராஜினாமா! – பின்னணி என்ன?

நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க-வை சேர்ந்த பி.எம்.சரவணன் உள்ளார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. அதனால் அவரை மாற்ற வேண்டும் என்று பலமுறை கட்சித் தலைமைக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்ததுடன், மாநகராட்சி கூட்டங்களிலேயே மேயருக்கு எதிராக பேசி வந்தனர்.

மாநகராட்சி கூட்டம் (கோப்பு படம்)

அத்துடன், மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் கடிதம் கொடுக்கும் அளவுக்கு நிலைமை சிக்கல் அடைந்தது. நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கூட இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் எட்டப்படவில்லை.

கடந்த வாரம் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேயர் மீதான அதிருப்தி காரணமாக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அனேகர் கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்தனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே கூட்டம் நடக்கும் அரங்கின் உள்ளே வந்திருந்தனர். அதனால் ’கோரம்’ இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இது போன்று கூட்டம் நடக்காமல் இருப்பதால் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் உருவானது.

மேயர் சரவணன் பேச்சுவார்த்தை (கோப்பு படம்)

சாலை வசதி, மழைநீர் வடிகால் பணிகள், மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட மக்களின் அடிப்படையான பணிகளை நிறைவேற்றக் கூட முடியாத அளவுக்கு மேயர் மற்றும் கவுன்சிலர்கள் மோதல் நீடித்தது. கவுன்சிலர்கள் பலரும் தங்களின் வார்டுக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றாமல் மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்கள்.

இந்த நிலையில், மேயர் சரவணனை சென்னைக்கு அழைத்த கட்சித் தலைமை, அவரின் நடவடிக்கையை கண்டித்ததாக தெரிகிறது. கவுன்சிலர்களுடனான மோதல் காரணமாக மக்களிடம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதை உளவுத்துறை அறிக்கைகள் மூலம் அறிந்ததாக தெரிவித்த தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர் சரவணனை ராஜினானா கடிதம் எழுதிக் கொடுக்குமாறு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி

அதன்படி இரு தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கடிதம் கொடுத்துவிட்டு இன்று காலை நெல்லைக்கு வந்து சேர்ந்தார். அத்துடன், தனது உதவியாளர் மற்றும் உறவினர்கள் மூலம் மேயர் அறையில் இருந்த பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிகிறது. உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளரிடம் முறைப்படி ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கடிதத்தை பரிசீலித்து இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் உரிய முடிவை ஆணையாளர் அறிவிப்பார் எனவும் நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மேயரின் ராஜினாமா அதிகாரபூர்வமானதுதான் என்றும், ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த மாதாந்திரக் கூட்டம் வரும் 8-ம் தேதி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் நடைபெறும் எனவும், மாநகராட்சி வட்டாரத்தில் உறுதியாகச் சொல்கின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் நிலவும் இந்த குழப்பமான சூழல் காரணமாக, மக்களிடம் குழப்பமும் அதிருப்தியும் உருவாகியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.