மேகாலயாவில் தொடங்கியது இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி

புதுடெல்லி: இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று மேகாலயாவில் தொடங்கியது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியா – மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 16-வது பதிப்பு மேகாலயா மாநிலம் உம்ரோயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (03.07.2024) தொடங்கியது. இந்த பயிற்சி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

45 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், சிக்கிம் சாரணர் இயக்கத்தின் ஒரு பிரிவு மற்றும் பிற ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். மங்கோலிய ராணுவத்தின் சார்பில் அந்நாட்டின் 150 விரைவு அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நோமாடிக் எலிபெண்ட் பயிற்சி என்பது இந்தியாவிலும், மங்கோலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடந்த முறை இந்தப் பயிற்சி ஜூலை 2023-ல் மங்கோலியாவில் நடத்தப்பட்டது.



இந்த ஆண்டு இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான மங்கோலிய தூதர் தம்பஜவின் கன்போல்ட் மற்றும் இந்திய ராணுவத்தின் 51 துணைப் பகுதி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்னா ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுதல், தேடுதல் நடவடிக்கைகள் ட்ரோன்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை இந்த ஆண்டு பயிற்சியில் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.