கிழக்குப் பல்கலைக்கழகம் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்ட விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை, கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டத்தின் (Booster Grant Project) விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் (02) நடைபெற்றது.

ஆசிய பசுபிக் மெப்பிங் ஹப் (Asia -Pacific Mapping HUB) அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற இவ்விழாவில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர். வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் கலாநிதி. த.பிரபாகரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

புவியியற் துறையின் தலைவரும் செயற்திட்ட இணைப்பாளருமான தவப்பிரபா சச்சிதானந்தமின் வரவேற்புரை மற்றும் தலைமையுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் (CICL பணிப்பாளர் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

இதன் போது செயற்திட்டத்தின் செயற்பாடுகள், அது கடந்து வந்த பாதை என்பன தொடர்பான அனைத்து விடயங்களும் புவியியற் துறைப் பேராசிரியர் கந்தையா ராஜேந்திரம் தெளிவுபடுத்தினார்.

இந்த செயற்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 39 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நவீன தொழிநுட்பத்தினை உள்ளடக்கிய openstreetmap ஊடாக தயாரிக்கப்பட்ட படங்கள் (maps) மட்டக்களப்பு மாவட்ட உப அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய படங்கள் (maps) மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் என்பன இந்நவீன தொழில்நுட்பத்தினூடாக படமாக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் இச்செயற்திட்டத்தின் செயற்பாடுகளை உள்ளடக்கிய தொகுப்பு, OpenStreetMap சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய சஞ்சிகை, GeoMap VistaEUSL என்ற வலைத்தளம் ஆகியன இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்திட்டத்தினால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோர்கள், அரசாங்க உத்தியோகத்தர்களான நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச செயலகங்கள், நகரசபை போன்றவற்றின் உத்தியோகத்தர்கள், விவாசாய போதனாசிரியர்கள், ஊழியர்கள் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு OpenStreetMapனூடாக படங்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களான சப்ரகமுவ, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, தென்கிழக்கு. ரஜரட்ட மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் உத்தியோத்தர்களுக்குமான பயிற்சிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற் துறையினால் நடாத்தப்பட்டது.

இவ்விழாவில் இம்முன்னணி பல்கலைக்கழகங்களிலிருந்து பயிற்சியை பெற்றுக்கொண்ட மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்பட்ட பயிற்சி தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் இச்செயற்திட்டத்தினூடாக சமூகத்திற்கு வழங்கிய உன்னதமான சேவையையிட்டு வழிநடாத்திய உபவேந்தர் உட்பட கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் (CICL) பணிப்பாளர், புவியியல் துறையின் தலைவர் LUL நிர்வாகிகள் மற்றும் புவியியல் துறையின் இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்த அனைவரையும் பாராட்டினார்.

இப்பயிற்சியை பெற்றுக்கொண்டதனூடாக படங்களை தயாரித்து உயர் பங்களிப்பினை வழங்கிய (High contributor) மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

இது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் புவியியற்துறையினால் செயற்படுத்தப்பட்ட முக்கியமான மைல்கல் நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.