சேலத்தில் அதிமுக முன்னாள் மண்டலக் குழு தலைவர் கொலை: அதிமுகவினர் சாலை மறியலால் பதற்றம்

சேலம்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (60). சேலம் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவரான இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்தச் சம்பவம் பற்றி அறிந்த அன்னதானப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனிடையே, சண்முகம் கொலை செய்யப்பட்டதை அறிந்த சேலம் அதிமுக நிர்வாகிகள் தாதகாப்பட்டிக்கு திரண்டனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதித்து.



இதனால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக நிர்வாகிகள், கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சண்முகத்தின் உடலைக் கைப்பற்றிய அன்னதானப்பட்டி போலீஸார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்த நிலையில் சேலத்தில் அதிமுக கிளைச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் சேலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.