ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு ஜூலை 8 முதல் 10 வரை பிரதமர் மோடி பயணம்

புதுடெல்லி: ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். 22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர், ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் மாஸ்கோவில் பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முக உறவுகளின் முழு வரம்பையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள். மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள சமகால பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொள்வார்கள்.

ரஷ்யாவில் இருந்து 9-ம் தேதி பிரதமர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்வார். கடந்த 41 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரிய குடியரசின் அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், பிரதமர் கார்ல் நெஹாமர் ஆகியோருடன் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். இந்தியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகம், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், இரு நாட்டுப் பிரதமர்களும் உரையாற்றுவார்கள். மாஸ்கோ, வியன்னாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.