அப்போதைய ஸ்ரீசாந்த் தான் இப்போதைய பும்ரா – முதல் டி20 நாயகனை மறந்து விடாதீர்கள்

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்றிருக்கிறது. பும்ராவின் சிறப்பான பந்துவீச்சில் இறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி, அசத்தலான கம்பேக் கொடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணம் பும்ராவின் அட்டகாசமான பந்துவீச்சு தான். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை சிறப்பாக பந்துவீசிய அவர், தொடர் நாயகன் விருதையும் பெற்றார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் தொடர் நாயகன் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதே துல்லியமான பந்துவீச்சு முதன்முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை 2007 ஆம் ஆண்டு வென்றபோது அந்த அணியில் இடம்பிடித்திருந்த ஸ்ரீசாந்த், ஆர்பி சிங்கிடம் இருந்தது. அவர்கள் இருவரும் அந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் பந்துவீச்சில் முதுகெலும்பாக இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் எப்படி பும்ரா மிக துல்லியமாக பந்துவீசி அந்த அணியை கலங்கடித்தாரோ, அப்படி தான் 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீ சாந்த் பந்துவீசினார். அவரின் பந்துகள் ஒவ்வொன்றும் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களை சீண்டிச் சென்றது. முடிஞ்சா தொட்டு பார்… என்றளவிலேயே ஸ்ரீ சாந்த் ஆக்ரோஷமாக பந்துவீசினார். ஒருநாள் போட்டி உலக சாம்பியனாக ஆஸ்திரேலியா இருந்ததால், அந்த அணியே டி20 உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் அதிரடி பட்டாளத்தை டி20 உலகக்கோப்பைக்கு அனுப்பி வைத்திருந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியில் மேத்யூ ஹைடன், சைமண்ட்ஸ், மைக்கேல் கிளார்க், பிராட் ஹேடின் என 11 பேரில் 9 பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இருந்தனர். இவர்களுடன் இந்திய அணியை ஒப்பிடும்போது முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தது. பிரெட் லீ, மிட்செல் ஜான்சன் என்றாலே பேட்ஸ்மேன்கள் பதறும் அச்சமயத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் இருந்தது ஸ்ரீ சாந்த், ஆர்பி சிங் ஆகியோர் தான். ஆனால் இருவரும் ஆஸ்திரேலிய அணியை மிரட்டி விட்டனர்.

பேட்டிங்கில் யுவ்ராஜ் சிங் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசியிருக்க, பந்தவீச்சில் ஸ்ரீ சாந்த் தெறிக்க விட்டார். கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன் ஆகியோரை கிளின் போல்டு செய்தார். போல்டு என்றால் சாதாரண போல்டு இல்லை, ஸ்டம்புகள் கீப்பருக்கு சென்றது. கூடவே ஆக்ரோஷத்தையும் ஸ்ரீ சாந்த் காட்ட, அவர் முன் அன்று ஆஸ்திரேலிய அணி திணறித்தான் போனது. 4 ஓவர்களை வீசி அதில் ஒரு ஓவரை மெய்டனாக்கி 12 ரன்களை விட்டுக் கொடுத்து 2 மிக முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் ஸ்ரீ சாந்த். இந்த இறுதிப் போட்டியில் பும்ரா வீசிய ஓவருக்கு சற்றும் சளைக்காத பர்பாமென்ஸ் தான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஸ்ரீசாந்த்தின் அன்றைய துல்லியமான பந்துவீச்சு. மேலும், இறுதிப் போட்டியில் ஸ்ரீ சாந்த் பிடித்த கேட்சுக்கு பிறகு தான் இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சாம்பியன் என்ற பெருமையும் கிடைத்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.