"குழந்தைகள் உண்ட மிச்சத்தை சாப்பிடுகிறேன்" அம்மா கரீனா கபூர் பெருமிதம்!

தன் குழந்தைகள் உண்ட உணவின் மிச்சத்தை ஓர் அம்மாவாக தான் சாப்பிடுவது குறித்து, நடிகை கரீனா கபூர் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவு, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான அன்பின் வெளிப்பாடு. தாய்மை அடைந்தது முதல், குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது வரை, தன் நலன்களை மறந்து குழந்தைகளை பற்றியே அந்தத் தாய் சிந்திக்கிறார். அதேநேரம், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், அவர்களைச் சாப்பிட வைப்பது தான்.

சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை விளையாட்டாக கதை சொல்லியும், சிலர் பயமுறுத்தியும் சாப்பிட வைப்பதுண்டு. என்னதான் செய்தாலும் குழந்தைகள் முழுமையாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு கொடுத்த உணவு மீந்துபோகும்.

குழந்தைகள் அப்படி மீதம் வைக்கும் உணவை வீணாக்காமல் தாயே உண்கிறார். குழந்தையின் எச்சில் பட்ட அந்த மீதமான உணவுகளில் தாய்க்கு கிடைக்கும் சுவையே அலாதியானது. குழந்தைகள் உண்டு மிச்சம் வைப்பதை முகம் சுளிக்காமல் தந்தை உண்பது என்பது அரிதாகத்தான் பார்க்க முடிகிறது; தாயே அவற்றை உண்டு ஆனந்தமடைகிறார்.

தாய்மையின் இத்தகைய சுகமான அனுபவத்தை, பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூரிப்புடன் வெளியிட்டிருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராமில், அடிக்கடி உணவு தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருபவர் கரீனா. குடும்பத்துடன் வீட்டுச் சாப்பாட்டை ருசிப்பதில் தொடங்கி, படப்பிடிப்பு தளங்களில் சக நடிகர்களுடன் பீட்ஸா உள்ளிட்டவற்றை ஒரு பிடி பிடிப்பது வரை அனைத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்து, உணவு மீது தனக்கு உள்ள காதலை பல தருணங்களில் நடிகை கரீனா கபூர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சைஃப் அலிகான்-கரீனா கபூர்

இந்நிலையில், கரீனாவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தைகள் உண்ணும் விஷயத்தில் பல தாய்மார்களுக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை, அவரும் பகிர்ந்துள்ளார். அதாவது, தன் குழந்தைகள் உண்ட உணவின் மிச்சத்தை தான் உண்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள படத்தில், ஏற்கெனவே உண்டு மீதமுள்ள கேக், உடைத்து வைக்கப்பட்ட அப்பளம் மிஞ்சி இருக்கின்றன. அத்துடன் கிண்ணத்தில் துண்டுகளாக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, பார்ப்பதற்கு கிரீம் போல் இருக்கிறது. அவர் பகிர்ந்துள்ள படத்தில், “I am the mother who eats her kids’ leftovers” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, என் குழந்தைகள் உண்டது போக எஞ்சியதை சாப்பிடும் தாய் நான் என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளதோடு, ஒரு குரங்கு, கண்கள் மற்றும் சிவப்பு நிற இதயத்தை சித்திரிக்கும் மூன்று எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார்.

நடிகை கரீனா தன் குழந்தைகள் மிச்சம் வைக்கும் உணவை சாப்பிடுவதாக வெளிப்படையாகக் கூறியிருப்பது, இது ஒன்றும் முதல்முறை அல்ல என்பதைச் சொல்லியாக வேண்டும்.

தனது பிஸியான பணிகளுக்கு மத்தியில் ஒரு தாயாக, குழந்தைக்கு இவ்வளவு நேரம் செலவிடும் கரீனாவை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.