“சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை..!” – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை சொல்வதென்ன?!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை `சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அளவு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியதும் மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்பட பல காவல் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. அதோது வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வோ கள்ளக்குறிச்சி வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென முதல்நாள் முதலே அழுத்தம் கொடுத்ததோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. அ.தி.மு.க-வை போல பா.ம.க-வும் வழக்கு தொடர்ந்தது. ஜூலை 3-ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். இதில் தன் தரப்பு விளக்கத்தையும் அறிக்கையாக சமர்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசின் அறிக்கை குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “கள்ளக்குறிச்சி பகுதிகளில் விற்கப்பட்ட சாராயத்தில் அதிகபட்சமாக 29.8% மெத்தனால் கலந்திருப்பதாக அறிக்கை சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மரக்காணம் சம்பவத்தில் இதனை விட அதிக அளவில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்தது. எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத வழக்கைதான் சி.பி.ஐ-க்கு மாற்ற முடியும். ஆனால் சம்பவம் நிகழ்ந்து இரு வாரங்களே ஆன நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். சம்பவத்தை தடுக்க தவறிய காவல் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்” என்றதோடு, `கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கவில்லை’ போன்ற தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன” என்றனர்

கள்ளக்குறிச்சி விவகாரம் – முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து பேசிவரும் அ.தி.மு.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார், “மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி தலைமையில் மதுவிலக்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம் கள்ளச்சாராய புழக்கம் எந்தெந்த கிராமங்களில் நடக்கிறதென தெளிவாகவே எடுத்துக் கூறினேன். அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் எங்கெல்லாம் விற்பனை நடந்ததென எஸ்.பி-யிடமும் தெரிவித்திருக்கிறேன். அதோடு சட்டமன்றத்திலும் கடந்தாண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்திலும் குறிப்பிட்டுள்ளேன்” என்கிறார். ஆனால் அரசின் அறிக்கையில் அ.தி.மு.க செந்தில்குமார் புகார் தெரிவிக்கவில்லை என்றிருக்கிறது.

செந்தில் குமார்

நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், “அப்படியே அவர் புகார் தெரிவில்லையென்றாலும் காவல் நிலையத்துக்கும் பின்புறம் நடக்கும் கள்ளச்சாராய விற்பனை குறித்து போலீஸாருக்கு தெரியாதென்பது வேடிக்கையாக இருக்கிறது. சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்ற உத்திரவிட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது” என்றனர்.

நம்மிடம் பேசிய நா.த.க-வின் கார்த்திகைசெல்வன், “தமிழ்நாடு சார்ந்த வழக்குகளை ஒன்றிய அரசின் சி.பி.ஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரிப்பதில் நாம் தமிழர் கட்சிக்கு உடன்பாடிருந்ததில்லை. ஆனால் தமிழ்நாடு அரசின் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் செயல்பாடுகளும் ஒன்றும் சிறப்பாக அமைந்திடவில்லை.

கார்த்திகைச் செல்வன்

சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் வேங்கைவயல் வழக்கு, திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வழக்கு உள்பட பல வழக்குகள் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. மேலும் தி.மு.க பிரமுகர்களும் இதில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், அதிகாரத்திலிருப்பவர்களின் அழுத்தம் தரக்கூடும். எனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்ற கூற்றை ஏற்றுக் கொள்கிறோம்.

அ.தி.மு.க ஆட்சியின்போது, சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கு என பல வழக்குகளை சி.பி.ஐ விசாரணை கேட்டதே தி.மு.க-தான் என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.

ஸ்டாலின் – திமுக

தி.மு.க நிர்வாகிகளோ, “சிபிஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டுமென்பதெல்லாம் எதிர்க்கட்சிகள் செய்யும் அப்பட்டமான அரசியல். சிபிஐ-க்கு மாற்றி வழக்கை திசைதிருப்ப துடிக்கும் பா.ஜ.க-வுக்கு துணைப் போகிறது அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்வரிசையிலுள்ள கட்சிகள். சிபிசிஐடி போலீஸார் எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது காழ்ப்புணர்ச்சி அரசியல். வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் விரைவில் அகப்படுவார்கள்” என்றனர்.

சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள நிலையில், சிபிஐ-க்கு வழக்கை மாற்ற உத்தரவிடப்படுமா என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.