அவருடைய விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவை தோற்கடிப்பதே என்னுடைய கனவு – ஜிம்பாப்வே வீரர் பேட்டி

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து இந்தியாவை தோற்கடிப்பதே தம்முடைய கனவு என்று ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு:- “மற்ற பவுலர்களை விட நான் கொஞ்சம் வித்தியாசமானவன் என்று நினைக்கிறேன். நான் சுப்மன் கில்லை அதிகமாக மதிக்கிறேன். ஏனெனில் அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்டுள்ளார். சொல்லப்போனால் அவர் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய பெயரைக் கொண்டுள்ளார்.

இருப்பினும் போட்டி என்று வரும் போது அவருடைய விக்கெட்டை எடுப்பது எனக்கு முக்கியம். எனவே நான் எந்த வீரரையும் பார்க்கப்போவதில்லை. அவர்களை அடிக்கடி அவுட்டாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜிம்பாப்வே அணிக்காக வெற்றியைப் பெற வேண்டும் என்பதே இலக்காகும். அதற்கு விக்கெட்டை எடுக்கிறோம் அல்லது எடுக்கவில்லை என்பது முக்கியமல்ல. அணியாக சேர்ந்து என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்பதே முக்கியம். அதனால் எதிரணியில் இருக்கும் பெரிய பெயர்களை நான் பார்க்கப் போவதில்லை. ஒருவேளை அவர்களை நான் அவுட்டாக்கினால் அது என்னுடைய அணிக்கு நல்லது. அதே சமயம் சுப்மன் கில் நல்ல பிளேயர். எனவே அவரை அவுட்டாக்குவது நன்றாக இருக்கும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.