ஒருபோட்டியில் கூட விளையாடாமல் கோடி கணக்கில் சம்பாதித்த ரிங்கு சிங்! எப்படி தெரியுமா?

2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு  வென்றுள்ளது. டி20 உலக கோப்பையின் முதல் பதிப்பில் 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பிறகு தற்போது ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. ஆரம்பத்தில் ரோஹித் சர்மா கேப்டனா? அல்லது ஹர்திக் பாண்டியா கேப்டனா என்ற குழப்பம் இருந்து வந்தது. பிறகு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் ஒரு சில வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலையும் பிசிசிஐக்கு ஏற்பட்டது. சுப்மான் கில், ரிங்கு சிங் போன்ற வீரர்களை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அவர்கள் ரிசர்வ் வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டனர். இதனால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பிறகு லீக் போட்டிகள் முடிந்த பிறகு கில், ஆவேஸ்கான் போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு திரும்பினர். இருப்பினும் ரிங்கு சிங் கடைசி போட்டி வரை வீரர்களுடன் இருந்து பிறகு நாடு திரும்பினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணிக்குள் நுழைந்தார் ரிங்கு சிங். டி20 உலகக் கோப்பையில் இடம் பெறாதது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் அணியில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் நான் தற்போது ஏமாறவில்லை. நான் விளையாடாவிட்டாலும், இந்திய அணி உலக சாம்பியனாக வேண்டும். இந்திய அணிக்கு தேவையான அனைத்தையும் செய்வேன். உலகக் கோப்பையை கொண்டு வருவேன்” என்று கூறி இருந்தார்.

ஐபிஎல்-லில் ரிங்கு சிங்கு குறைந்த தொகையே சம்பளமாக பெறுகிறார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங் 55 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார். ஆரம்பத்தில் ஏலத்தில் அவர் அந்த தொகைக்கு எடுக்கப்பட்டதால் இன்னும் அதே தொகையை சம்பளமாக பெறுகிறார். தற்போது டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடியை பரிசாக அறிவித்துள்ளது. இதில் வீரர்கள், பயிற்சி ஊழியர்கள், துணைப் பணியாளர்கள், ரிசர்வ் வீரர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு பங்கு செல்ல உள்ளது. ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 5 கோடியும், பயிற்சியாளர்களுக்கு ரூ. 2.5 கோடியும், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் மசாஜ் செய்பவர்கள் போன்ற மற்ற ஊழியர்களுக்கும் தலா ரூ. 2 கோடியும் வழங்கப்பட உள்ளது.  வெகுமதி அளிக்கப்படும். ரிசர்வ் வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இருந்த ஷுப்மான் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஐபிஎல்லில் ஒரு சீசன் முழுவதும் விளையாடினாலும், கிடைக்காத தொகை ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ரிங்கு சிங்கிற்கு கிடைக்க உள்ளது. தற்போது ரிங்கு சிங் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். 2வது டி20 போட்டியில் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தற்போது அவருக்கு கிடைக்கும் இந்த பணம் மேலும் உதவிகரமாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.