பிரதமர் மோடியை பேட்டரி காரில் அமர வைத்துக்கொண்டு அதிபர் மாளிகையை சுற்றிக்காட்டிய புதின்

மாஸ்கோ,

இந்தியாவும், ரஷியாவும் நீண்ட கால நட்புறவு கொண்ட நாடாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை பலப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தியா – ரஷியா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடியை பேட்டரி காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புதின் வலம் வந்தார். அப்போது குதிரை தொழுவத்தையும் அவர் பிரதமர் மோடிக்கு காண்பித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.