ஹர்திக் இல்லை? ரோஹித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியின் கேப்டனாகும் கேஎல் ராகுல்!

India vs Srilanka: டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி தற்போது ஓய்வில் உள்ளது. இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அல்லது விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் வழிநடத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இந்த இலங்கை தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹர்திக் பாண்டியா இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார், கேஎல் ராகுல் 12 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டார். கேஎல் ராகுல் கேப்டனாக இருந்து இதுவரை 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் முக்கியமான ஒரு வீரராக இந்திய அணிக்கு இருந்து வருகிறார். 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நிறைய போட்டிகளை வெற்றி பெற ராகுல் ஒரு காரணமாக இருந்தார். மேலும் 2024 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் இந்தியாவுக்காக விளையாடினார்.

ரோஹித் சர்மா ஓய்வு

ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக விளையாட  உள்ளார். மேலும் 2025 சாம்பியன் டிராபி வரை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிபடுத்தியுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி மற்றும் பும்ராவுடன் சேர்ந்து அவருக்கும் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் மூன்று பெரும் செப்டம்பர் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

“அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட உள்ளனர். ரோஹித், விராட் மற்றும் பும்ரா செப்டம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறுவார்கள். அதனை தொடர்ந்து வரும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவார்கள். மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு, விராட் மற்றும் ரோஹித் இருவரும் டெஸ்டு போட்டிகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். செப்டம்பர் முதல் ஜனவரி வரை இந்திய அணி 10 போட்டிகளில் விளையாட உள்ளது. இலங்கை தொடரில் விராட், ரோஹித் விருப்பப்பட்டால் விளையாடலாம். ஆனால் அவர்கள் ஓய்வை தான் எதிர்பாப்பார்கள்” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.