புதுடெல்லி: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ரூ.74.93 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2020, அக்டோபர் 3-ம் தேதி அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சிவக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் எஸ்சி ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் விபின் சங்கி ஆகியோர், சிவகுமாருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு “முற்றிலும் சட்டவிரோதமானது” என்றனர்.
அப்போது, சம்பந்தப்பட்ட குற்றங்கள் ஊழல் தடுப்பு (பிசி) சட்டத்தின் கீழ் தீவிரமானவை என்று நீதிபதி திரிவேதி, முகுல் ரோஹத்கி-க்கு நினைவுபடுத்தினார். அதற்கு, “பிசி சட்டத்தின் பிரிவு 17A மத்திய விசாரணை நிறுவனத்தால் பின்பற்றப்படவில்லை. தகுந்த அதிகாரத்தின் முன் அனுமதியின்றி பிசி சட்டத்தின் கீழ் ஒரு பொது ஊழியர் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றத்திற்கும் விசாரணை நடத்தப்படக் கூடாது. தேவையான அனுமதியைப் பெறாமல் விசாரணை நடத்தப்படுவதற்கு பிரிவு 17A தடை விதிக்கிறது” என்று ரோஹத்கி வாதிட்டார்.
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 41 லட்சம் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார். வழக்கை, வருமான வரித்துறை ஏற்கனவே விசாரித்து வரும் நிலையில், அதே குற்றச்சாட்டுக்காக சிபிஐ-யும் ஒரே நேரத்தில் விசாரணையைத் தொடங்க முடியாது என்று ரோஹத்கி கூறினார்.
இரண்டும் வெவ்வேறு விசாரணைகள் என தெரிவித்த நீதிபதி திரிவேதி, சிபிஐ வழக்கை ரத்து செய்வதற்கான வாதங்களை நிராகரித்தார். டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் மறுத்துவிட்ட நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
வழக்கின் பின்னணி: கடந்த 2017-ஆம் ஆண்டு சிவக்குமாரிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணையைத் தொடங்கியது. அமலாக்கத் துறை விசாரணையைத் தொடர்ந்து, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய மாநில அரசிடம் சிபிஐ அனுமதி கோரியது. செப்டம்பர் 25, 2019 அன்று சிபிஐக்கு அனுமதி கிடைத்தது. அக்டோபர் 3, 2020 அன்று, சிவக்குமார் ரூ. 74.93 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.