ராஜபாளையம் அருகே சேத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சேத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் திருமண பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு பொதுமக்களிடமிருந்து அதிகாரி கார்த்திகேயன் லஞ்சம் பெறுவதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது. அதனடிப்படையில் சேத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு விரைந்துசென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சால்வன்துரை ஆகியோர் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்து, தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட தயாரான சார் பதிவாளர் கார்த்திகேயனை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் அதிகாரி கார்த்திகேயனின் டூவீலரில் இருந்து கணக்கில் வராத ரூ.14, 800 ரூபாய் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சார் பதிவாளர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்துகையில், அவர் முன்னுக்குப் பின் முரணான பதிலை அளித்துள்ளார் இதைத் தொடர்ந்து கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சார் பதிவாளர் கார்த்திகேயனுக்கு சம்மன் வழங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறனர்” எனக் கூறினர்.