புதுடெல்லி: குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவுக்காக மார்பில் துப்பாக்கி குண்டை ஏற்றுக் கொண்டார் என்று பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் நூலிழையில் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பாக பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்புக்கு 80 வயதாகிறது. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் துணிச்சலாக எழுந்து, அமெரிக்கா வாழ்க என்றுஉரக்க கோஷமிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்.
அமெரிக்காவுக்காக ட்ரம்ப் தனது மார்பில் துப்பாக்கி குண்டுகளை ஏற்றுக் கொண்டார்.அன்றைய தினம் அவர் குண்டுதுளைக்காத ஆடையை அணிந்திருந்தார். இதன்காரணமாகவே அவர் உயிர் தப்பினார். ‘வலதுசாரிகள் வன்முறையாளர்கள்’ என்று இடதுசாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அன்பையும், அமைதியையும் விரும்புவதாக கூறும் இடதுசாரிகள்தான், டொனால்டு ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இடதுசாரி சிந்தனைகள் ஒருபோதும் என்னை கவரவில்லை.ட்ரம்ப்பை கொலை செய்யும்முயற்சி தோல்வி அடைந்துள்ளதால் இடதுசாரிகள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த இடதுசாரிகள் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.