கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கடற்கரை வீதியானது 275 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிடும் பணிகளை, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டு நாள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர்.
குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறைக்கு மிகவும் பங்களிப்பு செய்யக்கூடிய முக்கிய போக்குவரத்து வீதிகளில் ஒன்றாக காணப்படும் 3.4KM நீளமான இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு அப்பிரதேச மீனவர்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தனிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வீதியானது காபெட் வீதியாக செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பரதன், நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் ஆ.தேவராசா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு செயலகத்தின் உத்தியோகத்தர் அருண் திருநாவுக்கரசு, உட்பட கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.