சீன அரசு உதவி – வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அரிசிப் பொதிகள்

சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வு நேற்று காலை (16.07.2024) யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலுள்ள குருநகர் கலாச்சார மண்டபத்தில் குருநகர் கடற் தொழில் சங்க அங்கத்துவ குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது

இதேபோன்று குறித்த அரிசி பொதி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக யாழ் மாவட்ட  அனைத்து கடற்றொழில் மக்களுக்கும் அந்தந்த பிரதேசங்களில் வழங்கி வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் துறைசார் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்பதாக கடந்த 12.07.2024 அன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, சம்பிரதாயபூர்வமாக குறித்த அரிசி பொதிகளை பயனாளர்களுக்கு வழங்கிவைத்திருந்தனர்.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவித்திட்டங்களை கோரிய நிலையில் சீன அரசு 1500 மில்லியன் நிதியை வழங்க முன்வந்திருந்தது.

குறிப்பாக நாட்டில் 15 கடற்றொழில் மாவட்டங்கள் உள்ள நிலையில் வடக்கு கிழக்கின் கடற்றொழில் சார் மக்களின் நலன்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த  சீன அரசு இணங்கியிருந்தது.

அதனடிப்படையில் சீன அரசின் 1500 மில்லியன் உதவித்திட்டத்தின் கீழ்  500 மில்லியன் நிதியில் அரிசி பொதிகளும் 500 மில்லியன் நிதியில் வீட்டுத்திட்டமும்  500 மில்லியனுக்கு வலையும்  வழங்கப்பட ஏற்பாடுகள் முன்னெடக்கப்படுக்கின்றன

அதன் ஒரு பகுதியாகவே குறித்த அரிசிப் பொதிகள் குருநகர் கடற் தொழில் சங்க அங்கத்துவ குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.