மத்திய பட்ஜெட் 2024: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலா 20 மணி நேரம் பொது விவாதம்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீது மக்களவை, மாநிலங்களவையில் தலா 20 மணி நேரங்கள் பொது விவாதம் நடைபெற உள்ளது. மக்களவையில் ரயில்வே, கல்வி, சுகாதாரம்,எம்.எஸ்.எம்.இ. மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகள் பற்றி தனித்தனியாக விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அவைகளில் உள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) திங்கள்கிழமை கூடி, அவையின் நிகழ்ச்சி நிரல்களை இறுதி செய்தது. என்றாலும், தேவைக்கு ஏற்பட புதிய விஷயங்களை சபாநாயகரின் அனுமதியுடன் அவையில் அரசு அறிமுகப்படுத்த முடியும். மாநிலங்களவையில், நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி மசோதாகள் மீது எட்டு மணி நேரம் விவாதம் நடைபெறும் என்றும், இன்னும் தீர்மானிக்கப்படாத நான்கு அமைச்சகங்கள் மீது தலா நான்கு மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, மக்களவையின் பிஏசி கூட்டத்தில், அக்னி பாதை, நீட் விவகாங்கள் குறித்து குறுகிய கால விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதாக அக்கட்சி எம்.பி. ஒருவர் தெரிவித்தார். என்றாலும் பல்வேறு அமைச்சங்கள் தொடர்பான விவாதத்தின் போது, கட்சிகள் அவர்களின் பிரச்சினைகளை எழுப்பலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.



இந்தநிலையில், பொது விவாதத்துக்கு 20 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கும்போது, பல்வேறு விஷயங்களை பற்றி கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், கல்வித் துறை அமைச்சகத்துக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது மதிப்பு மிக்க நீட் உள்ளிட்ட தேர்வு தாள் கசிவு குறித்த விவாதிக்கப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.