“காங்கிரஸ் ஆட்சி பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக் கால பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இண்டியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், வெளிநடப்பும் செய்தனர். இந்த பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர்கள்கூட குறிப்பிடப்படவில்லை என்றும், மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதற்கு மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர், “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நான் மகாராஷ்டிராவைக் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த மாநிலத்தின் ரூ. 76,000 கோடி மதிப்பிலலான துறைமுக திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். பெயர் குறிப்பிடாததால் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது.



செலவுக் கணக்கில் திட்டங்கள் வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மாநிலங்களுக்கு எதுவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறுவது அரசாங்கத்தை கேவலப்படுத்தும் காங்கிரஸின் திட்டமிட்ட முயற்சி. இது ஒரு மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு.

காங்கிரஸ் ஆட்சிக் கால நிதி அமைச்சர்கள் தங்கள் பட்ஜெட் உரையின் போது அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்களா? இதற்கு முன்பு ஆட்சி செய்து பல பட்ஜெட்களை தாக்கல் செய்த காங்கிரஸ் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.