கொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது டிரோன் தாக்குதல் – சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி

பொகோடா,

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. இந்த கிளர்ச்சியாளர்கள் அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

எனவே கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது. இந்தநிலையில் ஆர்ஜெலியா நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மைதானம் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

எனினும் இந்த தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு புரட்சிகர ஆயுதப்படை அமைப்பு பொறுப்பேற்று உளளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தாக்குதலில் பலியானவர்களுக்கு அதிபர் குஸ்டவோ பெட்ரோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.