Doctor Vikatan: எலுமிச்சை, தக்காளி, மஞ்சள்… சமையல் பொருள்களை  சருமத்தில் apply பண்ணலாமா..?

Doctor Vikatan: என் தோழி தினமும் சமைக்கும்போது, சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களில் எதையாவது எடுத்து முகத்தில் தடவிக்கொள்வாள். உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தயிர், புதினா சாறு… இப்படி எதையும் விட்டுவைக்க மாட்டாள். எல்லாமே சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது அவள் கருத்து. இந்த விஷயம் எந்த அளவுக்குச் சரியானது… சமையலுக்கான அனைத்துப் பொருள்களையும் நேரடியாக சருமத்திலும் apply செய்யலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா  

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சமையலுக்கான பொருள்களை முகத்தில் தடவிக்கொள்வது பற்றி கேட்கிறீர்கள். சிறுநீரை முகத்தில் தடவினால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும் என்றொரு நம்பிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. அதை நம்பி, பலரும் தங்களது சிறுநீரையே முகத்தில் தடவிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விநோதங்களும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

யூரியா என்பது  நீர்ச்சத்துக்கு காரணமானது. குறிப்பிட்ட சதவிகிதம் யூரியா உள்ள கான்சென்ட்ரேஷன், நம் சருமத்தின் ஈரப்பதம் குறையாமல், அதைத் தக்கவைக்கும். அதையும் இதையும் பொருத்திப் பார்த்து, தங்களது சிறுநீரையே மாய்ஸ்ச்சரைசராக உபயோகிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது.  எல்லா பொருள்களும் நம் சருமத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. இப்படி ஒவ்வாத பொருள்களால் ஏற்படும் அலர்ஜியை  சரும மருத்துவத்தில், ‘அலர்ஜிக் கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்’ (Allergic contact dermatitis) என்று சொல்வோம்.  எலுமிச்சைப்பழம், புளி, கிராம்பு போன்றவற்றில் இயல்பிலேயே ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, இப்படி உள்ளுக்குச் சாப்பிடுகிற எல்லாவற்றையும் சருமத்தில் அப்ளை செய்வது ஆரோக்கியமான விஷயமல்ல. 

facepack

சருமத்தின் அழகையும் இளமையையும் தக்கவைக்க வேண்டுமானால், நிறைய காய்கறிகள், பழங்களை உள்ளுக்குச் சாப்பிடுங்கள். அவற்றையெல்லாம் சருமத்துக்குப் பயன்படுத்தி, சிக்கலை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். சருமப் பராமரிப்பு என்ற விஷயத்தை எளிதாக வைத்துக்கொள்ளுங்கள். உள்ளே சாப்பிடும் காய்கறி, பழங்களில் ஒன்றிரண்டு வேண்டுமானால் பிரச்னையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அவையும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அர்த்தமில்லை. சருமத்தில் அப்ளை செய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று புரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில் தயிர், தேன், ஓட்ஸ் போன்றவற்றை சருமத்தில் தடவிக்கொள்வதால் பிரச்னைகள் வராது. 

ஒரு ஃபேஸ்பேக்கோ, ஆயில் மசாஜோ செய்துகொண்டு காத்திருக்கும் அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ உங்களுக்கு ஒருவித ரிலாக்ஸிங் மனநிலையைத் தரும்பட்சத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம். அந்த நல்ல உணர்வுக்காக இப்படிப்பட்ட வீட்டு சிகிச்சைகளை வாரம் ஒருமுறையோ, பத்து நாள்களுக்கு ஒருமுறையோ செய்து கொள்ளலாம். மற்றபடி அவை பலன் தரும் என்று நம்பாதீர்கள். அப்படி உங்கள் மனநிலைக்காக நீங்கள் தேர்வுசெய்கிற பொருள்களும் பாதுகாப்பானவையாக  இருக்கட்டும். எலுமிச்சை, புதினா என கிடைக்கும் எல்லாவற்றையும் சருமத்தில் தடவாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.