மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் மாற்றம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார்.

ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ், ஜார்கண்ட் ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளனர்.



சத்தீஸ்கரின் ஆளுநராக ராமன் தேகா, மேகாலயா ஆளுநராக சி.எச் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தெலங்கானா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் இருந்தார். தற்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர்களின் நியமனம், அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.