`மத்திய அரசு தரும் இலவச வீடு' யாருக்கு கிடைக்கும்… என்ன செய்ய வேண்டும்?

வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் வகையில், நரேந்திரமோடி அரசு 2015-ல் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது.

இந்த திட்டத்தில் யாருக்கு வீடு கிடைக்கும்? அதற்கு என்ன தகுதி வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா

விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

* பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் விண்ணப்பித்து வீடு கட்டலாம்.

* வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்; 2 அறைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

* உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவருக்கு சொந்த வீடு இருக்கக்கூடாது.

* ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க அரசின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்

* ஆதார் அட்டை அல்லது ஆதார் எண்

* புகைப்படம்

*பயனாளியின் வேலை அட்டை மற்றும் அட்டை எண்

* வங்கி பாஸ் புத்தகம்

* ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண்

* அலைபேசி எண்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்ட ஆவணங்களை இணையத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் இந்த ஆவணங்களுடன் அருகே உள்ள இ சேவை மையத்திற்கு செல்லலாம்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் https://pmaymis.gov.in திறந்து கொள்ளுங்கள். மெனு பாரை திறந்ததும் சில விருப்பங்கள் பட்டியல் வடிவில் தோன்றும். அதில் “Awaassoft” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து, மற்றொரு பட்டியல் திறக்கும். அதில் நீங்கள் “டேட்டா என்ட்ரி” என்பதைக் கிளிக் செய்தால் ஒரு பக்கம் திறக்கும். அதில் “DATA ENTRY FOR AWAAS” என்பதை தேர்வு செய்ய வேண்டும். மாநிலம், மாவட்டம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து “தொடரவும்” பொத்தானைக் கிளிக் செய்யுங்கள்.

அடுத்து, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல், கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு “உள்நுழை” பொத்தானைக் கிளிக் செய்யவும். பிறகு “பயனாளிகள் பதிவு படிவம்” உங்கள் முன் திறக்கும். அதில் உங்கள் “தனிப்பட்ட விவரங்கள்” தகவலை முதல் பிரிவில் நிரப்ப வேண்டும். இரண்டாவது பிரிவில் “பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை” நிரப்ப வேண்டும்.

அடுத்து, மூன்றாவது பிரிவில் நீங்கள் வேலை அட்டை எண், ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண் (SBM எண்) போன்ற “பயனாளிகளின் ஒருங்கிணைப்பு விவரங்கள்” தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

தொகுதி வாரியாக நிரப்பப்படும் நான்காவது பிரிவில், “சம்பந்தப்பட்ட அலுவலகத்தால் நிரப்பப்பட்ட விவரங்கள்” தொடர்பான தகவலை நீங்கள் நிரப்பி சமர்ப்பித்தால், உங்கள் விண்ணப்பம் சென்றடையும்.

விண்ணப்பித்த பின்னர் நீங்கள் பயனாளிகளின் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.