என்னை தேர்ந்தெடுத்தால்… நீங்கள் இனி எப்போதும் வாக்களிக்க வேண்டியதில்லை – டிரம்ப் பரபரப்பு பிரசாரம்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு (59) தனது முழு ஆதரவை அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், என்னை தேர்ந்தெடுத்தால், நீங்கள் இனி எப்போதும் வாக்களிக்க வேண்டியதில்லை என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் நடந்த பிரசாரத்தில் கிறிஸ்தவர்களிடையே உரையாற்றிய டிரம்ப், “நான் கிறிஸ்தவர்களை நேசிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம், அது உங்களுக்கே தெரியும்” என்று அவர் கூறினார்.

டிரம்பின் இந்த கருத்துக்கள் இரு கட்சிகளும் தங்களின் தீவிர ஆதரவாளர்களை வாக்கெடுப்புக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன என்று கூறப்படுகிறது.

இருப்பினும், டிரம்ப் பேசியது குறித்து, பிரசாரத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறுகையில், “டிரம்ப் நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார். இந்த நாட்டை ஒன்றிணைத்தல் மற்றும் ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் செழிப்பைக் கொண்டுவருவது பற்றி டிரம்ப் பேசினார்” என்று அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.