தலையில் பாய்ந்த ஈட்டி; சிகிச்சை பலனின்றி மூளைச்சாவடைந்த 10-ம் வகுப்பு சிறுவன்… வடலூரில் சோகம்!

கடலூர் மாவட்டம், வடலூர் தர்மசாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (15) வடலூர் சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

கிஷோர்

இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி நடந்தது. ஈட்டி எறிதல் பயிற்சியின் போது அங்கு கிஷோர் இருந்திருக்கிறார். பயிற்சியில் வீசப்பட்ட ஈட்டி கிஷோரின் தலையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த கிஷோரை, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்தான் நேற்று மருத்துவர்கள் மாணவன் கிஷோர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த கிஷோரின் தாய் சிவகாமி ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல்துறை

அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியிருக்கிறார். இதற்கிடையில், மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், கிஷோரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் மற்றும் 3 ஆசிரியர்களை வடலூர் போலீஸார் கைதுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவன் விளையாட்டு பயிற்சியின்போது காயமடைந்து மூளைச்சாவு அடைந்த சம்பவம், வடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.