தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தம்

நுகர்வோருக்கு சிறந்த வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும் நியாயமான கட்டணத்தை பரிந்துரைப்பதற்கும் 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது, சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு, அதற்காக சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பஸ் கட்டணம் மற்றும் ஏனைய பொது போக்குவரத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளதாகவும், முச்சக்கர வண்டிகள், பாடசாலை வாகனங்கள், அலுவலக வாகனங்கள் போன்றவற்றின் கட்டணத்தை நிர்ணயிக்க போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

இதன்படி, நுகர்வோருக்கு சிறந்த வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும், நியாயமான போக்குவரத்து கட்டண முறையை பரிந்துரைப்பதற்கும், முச்சக்கர வண்டிகள், பாடசாலை வாகனங்கள், அலுவலக வாகனங்கள், தரைவழி போக்குவரத்து உட்பட போக்குவரத்து வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு 2022.09.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.