வயநாடு நிலச்சரிவு: பலி 50 ஆக அதிகரிப்பு; ராகுல் காந்தி, பிரியங்கா விரைகின்றனர்

புதுடெல்லி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 9497900402, 0471 2721566. ஆகிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்துவரும் சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாடுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட உள்ளனர்.

இதற்கிடையில், அங்கு மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.



கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 50 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றும் (ஜூலை 30) கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 குடும்பங்கள் தவிப்பு: நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பதிவில், “வயநாடு நிலச்சரிவு குறித்து அறிந்து துயரடைந்தேன். தங்களின் அன்புக்குரியவர்கள் இழந்து வாடுவோருக்கு ஆறுதலை உரித்தாக்குகிறேன். காயமடைந்தோர் விரைவில் குணம் பெற பிரார்த்தனைகள். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறன. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு பேசினேன். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன்.

கேரள முதல்வருடனும், வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் பேசியுள்ளேன். அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு வேண்டியுள்ளேன். மத்திய அமைச்சர்களுடன் பேசி வயநாடுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்துவேன். ஐக்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். அங்கு அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், ராஜினாமா செய்திருந்தாலும் ராகுல் வயநாடு நிலச்சரிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.