மே.வ: மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை… கொல்லப்பட்ட மருத்துவ மாணவி; வீதியில் இறங்கிய மாணவர்கள்!

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி பெற்றுவந்த இரண்டாமாண்டு முதுகலை மருத்துவ மாணவி நேற்று உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக போலீஸ் உறுதிசெய்திருப்பது மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – கொல்கத்தா

இந்த சம்பவமானது கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்திருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் நேற்று முன்தினம் (வியாழன்) இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலுள்ள செமினார் அறைக்கு படிக்கச் சென்றவர் நேற்று காலை உயிரிழந்து கிடந்திருக்கிறார். அதையடுத்து, உடலை மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருப்பது தெரியவரவே, ஒரு நபரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல், “மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை நடத்தியது. இதன் முழு செயல்முறையும் வீடியோகிராஃபி மூலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பிரேத பரிசோதனை நடவடிக்கைகளின் போது மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சாட்சிகளாக இருந்தனர். இதில், பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் இருந்தன.

குறிப்பாக, பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள், கணுக்கால் ஆகியவற்றில் காயங்கள் இருந்தன. இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை, அவர் முக்கிய குற்றவாளி. எங்களிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. எனவே, கைதுசெய்யப்பட்ட நபருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த இதில் கைதுசெய்யப்பட்ட நபர் வெளியிலிருந்து வந்தவர் என்றும், அதேசமயம் மருத்துவமனையின் அனைத்து துறைகளுக்கும் செல்ல அனுமதி பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இன்னொருபக்கம், குற்றவாளிக்கு கடுமையாக தண்டனையளிக்கப்டும் என்று உறுதியளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, “இதுவொரு மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் பேசி உறுதியளித்திருக்கிறேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மம்தா பானர்ஜி

மரண தண்டனைக்கு நான் ஆதரவாக இல்லையென்றாலும், இந்த வழக்கில் தேவைப்பட்டால் குற்றவாளி தூக்கிலிடப்படுவார். மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேசமயம், இந்த நேரத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நோயாளிகளை யாரும் புறக்கணிக்க வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மறுபக்கம், மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.