நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2024 ஓகஸ்ட் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2024 ஓகஸ்ட் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (22ஆம் திகதி) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.