போஸ்னியா: பள்ளியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

சரஜீவோ,

போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மெஹ்மத் உகாலிக். பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. எனினும், தேர்வுகளை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், உகாலிக் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் பள்ளியின் டீன், செயலாளர் மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ஆகியோரை சுட்டு கொலை செய்துள்ளார்.

அந்த ஆசிரியை, அவருக்கு பதிலாக பணிக்கு வந்தவருக்கு உதவிக்காக பள்ளிக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபர், தன்னையும் சுட்டுள்ளார். எனினும், நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுபற்றி காவல் துறை இயக்குநர் அமெல் கோஜ்லிகா கூறும்போது, இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

இதுபற்றி மேயர் பரீஸ் ஹசன்பெகோவிச் கூறும்போது, இந்த சம்பவம் நடந்ததற்கான காரணம் பற்றி அறியும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இதுபற்றி கூறுவதற்கோ அல்லது இதனை நியாயப்படுத்துவதற்கோ எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கூறியுள்ளார்.

அந்த பள்ளியிலுள்ள பணியாளர்கள் சிலர் கூறும்போது, ஒரு தூய்மை பணியாளராக உகாலிக், அவருடைய பணியில் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டார் என தெரிவித்தனர். போஸ்னியாவில் 1990-ம் ஆண்டு போர் நடந்த பின்னர் தனிநபர்களின் கைகளில் ஆயுதங்கள் இருக்கின்றன என்றபோதும், பெரிய அளவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததில்லை. இந்த சூழலில், பள்ளியில் பணியாளர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.