அசாமில் மைனர் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கவுகாத்தி,

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், நேற்று மாலை சாலையோரம் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அருகில் அவரது சைக்கிளும் இருந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 10-ம் வகுப்பு படித்து வருவதாகவும், பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 3 பேர் தன்னை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் அந்த சிறுமி சாலையோரமாக மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உள்ளூர் மக்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, போலீசார் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தபுஜல் இஸ்லாம் என்ற நபரை கைது செய்துள்ளனர். மேலும் 2 குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா உறுதியளித்துள்ளார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.