`எங்கு என்ன நடந்தாலும் நடவடிக்கை எடுக்க வருண்குமார் ஐ.பி.எஸ் யார்?' – காட்டமான சீமான்

`அமெரிக்கா செல்லும் முதல்வர், இடைக்கால முதல்வர் பதவியை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கலாம்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இதைத் தெரிவித்த சீமான், “அதிகாரமிக்க கட்சிகளுடன் மோதும்போது படை வலிமையாக இருக்க வேண்டும். வலிமையான படையாக மாறி இருக்க வேண்டும். எளிமையான வேலை… இனிமையான பயணம் என்கிற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கட்சியில் இருந்து யாரும் வெளியில் செல்லவில்லை. நீக்கப்பட்டவர்கள்தான் வெளியே சென்றுள்ளார்கள். பழனி முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது தீர்மானங்களா… அதில் சம்ஸ்கிருத மொழி பயன்படுத்தப்பட்டது. இன்று தி.மு.க முருகனை தொட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. இது போன்ற மாநாடுகள் வாக்கரசியல்தான். தமிழ்நாட்டில் பள்ளிப்பாடப் புத்தகத்தில்கூட இன்னும் திருக்குறளைக் கொண்டு செல்லவில்லை. ஆனால், கந்தசஷ்டி கவசம் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள். அதைப் படித்தாலும் தமிழர்கள் கருவறைக்குள் செல்ல முடியவில்லை.

திருச்சி எஸ்.பி வருண்குமார்

தமிழில் அர்ச்சனை செய்வதில்லை. வழிப்பாட்டில் தமிழ் இல்லை. இந்தப் பிரச்னைகளுக்கு ஆட்சியாளர்கள்தான் காரணம். நான் என்ன வேலை செய்கிறேன்… திருச்சி எஸ்.பி என்ன வேலை செய்கிறார். `என்னை அவர் பிச்சைக்காரர்’ என்று சொல்லக் கூடாது. வருண் குமார் திருச்சியிலும், அவர் மனைவி புதுக்கோட்டையிலும் எந்த செல்வாக்கைப் பயன்படுத்தி பணி பெற்றார்கள்… என்னிடம் பணம் இல்லாததால் மக்களிடம் பணம் வாங்குகிறேன். அதை பிச்சை என்றே வைத்துக் கொள்ளுங்கள். என் பணத்திலிருந்துதான் நீங்களே (எஸ்.பி) சம்பளம் வாங்குகிறீர்கள். எஸ்.பி யாருக்காக வேலை செய்கிறார்களோ… அவர்களே அவர் குடும்பம் குறித்து எழுதி நம் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்னையை ஏற்படுத்தி அதை ரசிப்பார்கள். தமிழ்நாட்டில் எங்கு குற்றம் நடந்தாலும் திருச்சிக்கு அழைத்து வந்து நடவடிக்கை எடுப்பதற்கு வருண் குமார் யார்… கன்னியாகுமரியில் துரைமுருகன் பேசிய பேச்சுக்காக திருவள்ளுவர் எஸ்.பி-யாக வருண் குமார் இருந்தபோது துரைமுருகன் கைதுசெய்யப்பட்டார். தற்போது விக்கிரவாண்டியில் பேசிய பேச்சுக்காக திருச்சியில் கைதுசெய்யப்படுகிறார். மற்ற மாவட்டங்களில் காவல்துறையே இல்லையா… என் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது எழுதினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால், அவர்கள் எந்த மாவட்டமோ அந்த மாவட்டத்தில்தான் கைதுசெய்ய வேண்டும். அங்கிருந்து திருச்சிக்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி உள்ளார்கள். எஸ்.பி வருண் குமார் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். துரைமுருகன் கைதுசெய்யப்பட்டபோது அவரின் செல்போனை பறித்து அதிலிருந்து உரையாடல்களை வெளியே விட்டது ஏன்…. அந்த உரையாடல்கள் எப்படி தி.மு.க ஐ.டி விங்குக்குச் சென்றது…

என்னை பொதுவெளியில் வைத்து அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளார்கள். இந்த ஆடியோவால்தான் நாட்டில் எல்லா பிரச்னைகளும் நடந்ததுபோல் பேசினார்கள். ஒரு பேச்சை வெட்டி ஒட்டி வெளியிட்டுள்ளார்கள். அதனால் எத்தனை பேர் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக, வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மட்டும்தான் மானம் உள்ளதா… எங்கள் குடும்பப் பெண்களுக்கு மானம் இல்லையா…. எஸ்.பி வருண் குமாருக்கு மட்டும்தான் மானம் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா…. ஐ.பி.எஸ் படித்தால் அந்த வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க ஐ.டி விங்கில் சேர்ந்து கொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நிராகரித்த ஆளுநர், பிரபாகரனுக்கு கையெழுத்து இட்டது எப்படி… அவர் கோவையில் பா.ஜ.க-விற்கு ஆதரவாகப் பணியாற்றினார். தமிழர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசைக்கு எந்த பதவி கொடுக்காமல் மீண்டும் எல்.முருகனுக்கே பதவி கொடுத்தது ஏன்… தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.

பேட்டியளிக்கும் சீமான்

தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஒரே கட்சிதான். அவர்கள் கூட்டணி வைக்க வேண்டியதில்லை. ஒரு கட்சியை தொடங்குவது எளிது, தொடர்ந்து களத்தில் நிற்க வேண்டும். அதுதான் முக்கியம். நடிகர் விஜய் எப்படி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, அவர்தான் முடிவு செய்ய வேண்டும். நான் எதிர்த்ததால்தான் சென்ற வருடம் கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டது. கார் பந்தயம் வைக்க தற்போது தேவை என்ன இருக்கிறது… அதனால் போக்குவரத்துதான் பாதிக்கப்படும். அதை ஏன் நடத்த வேண்டும்…. ஒலிம்பிக், கார் பந்தயம் இவற்றால் எந்த பலனும் இல்லை. முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் சிறக்க வாழ்த்துகள். இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம் என போகிறப் போக்கில் பொய் கூறிச் செல்கிறார். ரஜினிகாந்த் பேசியது நகைச்சுவைக்காகப் பேசியதுதான். ரஜினி பேசியதும், துரைமுருகன் பேசியதும் நகைச்சுவைதான். அமெரிக்கா செல்லும் முதல்வர், இடைக்கால முதல்வர் பதவியை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கலாம். தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களிலேயே எடப்பாடி பழனிசாமிதான் புத்திசாலி. அவரை தற்குறி என பேசக் கூடாது. தைப்பூசத்துற்கு விடுமுறை தந்தது எடப்பாடிதான். அண்ணாமலை படித்தவர். அவர் பழனிசாமி யை அவ்வாறு பேசக் கூடாது. சாலை வரி இருக்கும்போது எதற்கு சுங்கச்சாவடிகள்… அவை அகற்றப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.