கன்னட நடிகர் தர்ஷனை பெங்களூரு சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்ற நடவடிக்கை

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கன்னட நடிகர் தர்ஷன் மீது புகார் எழுந்ததை அடுத்து, அவரை பெல்லாரி சிறைக்கு மாற்ற சிறைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது மேலாளர் நாகராஜ், பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளன‌ர்.

இந்நிலையில், தர்ஷன் சிறையில் நாற்காலியில் அமர்ந்து சொகுசாக நண்பர்களுடன் பேசியவாறு தேநீர் குடித்துக்கொண்டே, சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. அவருடன் குற்றவாளிகளான ரவுடி வில்சன் கார்டன் நாகா, குள்ளா சீனா ஆகியோரும், தர்ஷனின் மேலாளர் சீனிவாஸும் உள்ளனர். இந்தப் படம் வெளியான சில மணி நேரத்தில் தர்ஷன் தனது நண்பருடன் வீடியோ காலில் பேசும் வீடியோவும் வெளியானது. சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் தர்ஷன் சொகுசான அறையில் இருந்து சிரித்தவாறு பேசுகிறார். இந்த வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறும்போது, ‘‘பெங்களூரு சிறையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. இதையடுத்து சிறையின் தலைமை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, கண்காணிப்பாளர் மல்லிகார்ஜூன் சுவாமி உட்பட 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். சில அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு இந்த விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என கூறினார்.

இந்நிலையில், கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் தந்தை சிவண்ணா கவுடா கூறும்போது, ‘‘என் மகனை கொன்றவர்கள் சிறையில் சொகுசாக இருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தேன். போலீஸார் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது” என குறிப்பிட்டார்.

இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷன், பெல்லாரி சிறைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் மற்றும் சில பிரபல குற்றவாளிகளையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற பெங்களூரு காவல்துறை கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.