கச்சத்தீவு அருகே விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான மீனவர்களில் ஒருவரின் உடல் மீட்பு

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரைத் தேடும் பணி இன்று (ஆக.28) நடைபெற்ற நிலையில் மீனவர் எம்ரிட் உடல் மீட்கப்பட்டது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆக.26-ம் தேதி டல்வின்ராஜ் (45) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன் சுரேஷ் (49), வெள்ளைச்சாமி (எ) முனியாண்டி (55), எமரிட் (49) ஆகிய 4 பேர் கடலுக்குச் சென்றனர். ஆக.26-ம் தேதி நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக, படகில் இருந்த 4 மீனவர்களும் அருகில் இருந்த கச்சத்தீவை நோக்கி நீந்தத் தொடங்கினர்.

இதில் டல்வின் ராஜ் , சுரேஷ் ஆகிய 2 மீனவர்கள் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று கச்சத்தீவு மற்றும் அதனையொட்டிய சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ராமேசுவரம் மீன்வளத் துறையின் சார்பாக விசைப்படகில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.இந்த தேடுதல் பணியின் போது, நடுக்கடலில் மிதந்து வந்த மீனவர் எம்ரிட் என்பவர் உடல் மட்டும் மீட்கப்பட்டு ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.