திருப்பதி தேவஸ்தானத்தில் கோடி கணக்கில் முறைகேடு: முன்னாள் அறங்காவலர், நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ்

திருமலை: ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டுமுன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கருணாகர் ரெட்டி, முன்னாள் நிர்வாகஅதிகாரி தர்மாரெட்டி உட்பட மேலும்பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்சி, எஸ்டி-க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில்களை கட்டவும், நலிந்த கோயில்களை மராமத்து செய்யவும், தீப, தூப நைவேந்தியங்களுக்கு உதவவும் மட்டுமே பயன்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை எத்தனை கோயில்கள் கட்டப்பட்டது? எவ்வளவு செலவு செய்தனர் என்பது குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரூ.530 கோடி வரை முறைகேடு: இதில் ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவில் கான்டிராக்ட் வழங்கியதிலும் கோடி கணக்கில் முறை கேடுகள்நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆதலால், அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி மற்றும் திருப்பதி முன்னாள் எம்.எல்.ஏவும், அப்போதைய அறங்காவலர் குழு தலைவருமான கருணாகர் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மட்டுமே கான்டிராக்ட் பணிகள் நடத்தப்படும். ஆனால் இவர்களது நிர்வாகத்தில் மட்டும், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனைக்கு ரூ. 77 கோடி, கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கப்பட்டன.

மேலும் இதுபோல் பல சிவில் பணிகளுக்கும் கோடி கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கமிஷன்பல கோடி பெற்றுள்ளதாக வந்த புகார்களின் பேரில் தர்மாரெட்டி மற்றும்கருணாகர் ரெட்டிக்கும், தேவஸ்தானஆடிட்டர் பாலாஜி, முன்னாள் அறங்காவலரான ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், தேவஸ்தான சிம்ஸ் மற்றும்எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனையான பேர்ட்ஸ் மருத்துவமனையில் தர்மா ரெட்டி சில மாதங்கள் வரை கூடுதல் பொறுப்பில் இருந்தபோது, சட்டத்திற்கு புறம்பான வகையில் பல்வேறு பணி நியமனங்களும் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடுகள் விரைவில் வெளி உலகிற்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.