மாஞ்சோலை வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மறுவாழ்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான மனுக்கள், வனத் துறை வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வு தொடர்பாக மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

கிருஷ்ணசாமி வாதிடுகையில், மாஞ்சோலை பகுதி மக்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும். நீண்ட காலமாக வனத்தில் வசிப்பவர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருதலாம் என விதிகள் உள்ளது. அந்த வகையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் பாரம்பரிய வனவாசிகளாக கருதி அவர்கள் வனப்பகுதியிலேயே தொடர்ந்து வசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

பின்னர் நீதிபதிகள், மாஞ்சோலை தொழிலாளர்கள் பிபிடிசி நிறுவனத்தால் பணியமறுத்தப்பட்டவர்கள். அவர்களை பாரம்பரிய வனவாசிகளாக எவ்வாறு கருத முடியும்?. பாரம்பரிய வனவாசிகளுக்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் வேறுபாடு உள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியாத மனநிலையில் மத்திய அரசு உள்ளது. இந்த வழக்கில் இதுவரை மத்திய அரசு மனு தாக்கல் செய்யவில்லை.

இதனால் மத்திய பழங்குடியினர் நலத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பிபிடிசி நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.1141 கோடி குத்தகை பணம் பாக்கி வைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு ஏன் பதிலளிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.பிபிடிசி நிறுவன வழக்கறிஞர், குத்தகை பாக்கி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பிபிடிசி நிறுவனம் தடையாணை பெற்றுள்ளது என்றார்.

தமிக அரசு தரப்பில், பிபிடிசி நிறுவனம் கூடுதல் இழப்பீடு வழங்க முன்வந்தால் அதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் நீதிபதிகள், மாஞ்சோலை வழக்குகள் வனத்துறை வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. விசாரணை செப். 10-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.