இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள வருணா பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது நண்பர் சிவா. இவர்கள் 2 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு நண்பர்களாக பழகினர். இதில் சிவா சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து வாங்கிய கடனை சிவாவால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் கடனை அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில், தனது நண்பர் விஜய் பெயரில் ரூ.17 லட்சத்தில் இன்சூரன்ஸ் காப்பீடு செய்தார். அதற்கு சிவா நாமினி கையெழுத்து போட்டார். இதனால் விஜய்யின் இன்சூரன்ஸ் பணத்தின் மீது சிவாவிற்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி இருவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். பின்னர் மதுபோதையில் இருந்த சிவா, பெரிய கல்லை எடுத்து விஜய்யின் தலையில்போட்டார். இதில், சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிவா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நேரில் சென்று சிவாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ரூ.17 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பர் விஜயை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.