இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

கொழும்பு,

கடந்த ஜூலை 23-ந் தேதி 9 ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்லவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களும், மீனவ அமைப்புகளின் நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கைதான 9 மீனவர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படகு ஓட்டுநர் ராபர்ட் என்பவருக்கு ஓராண்டு சிறையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாதம் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன் பிடிக்க சென்று காற்றில் சிக்கி படகு கடலில் மூழ்கி மாயமான 2 மீனவர்களை தேடி கண்டுபிடித்து தர வேண்டும். உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களையும் ராமேசுவரம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.