எனது மகனின் கிரிக்கெட் கெரியரை அழித்தது தோனிதான் – யுவராஜ் சிங் தந்தை விளாசல்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவ்ராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். அந்த வகையில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் மிகச்சிறந்த போராளியாக கருதப்படும் யுவ்ராஜ் சிங் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

இந்நிலையில் தம்முடைய மகன் யுவராஜ் சிங் கேரியரை கேப்டன் எம்.எஸ். தோனி அழித்து விட்டதாக முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் யுவராஜ் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “எம்.எஸ். தோனியை நான் மன்னிக்க மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். பெரிய கிரிக்கெட்டரான அவர் எனது மகனுக்கு எதிராக செய்த விஷயங்கள் தற்போது வெளிவருகிறது. என்னுடைய வாழ்வில் அவரை எப்போதும் நான் மன்னிக்க மாட்டேன். என்னுடைய வாழ்வில் 2 விஷயங்களை செய்ததில்லை. ஒன்று எனக்கு தீங்கிழைத்தவர்களை எப்போதும் நான் மன்னித்ததில்லை. இரண்டு அவர்கள் எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எனது வாழ்நாளில் எப்போதும் அவர்களை மறக்க மாட்டேன்.

தோனி இன்னும் 5 – 6 வருடங்கள் விளையாடியிருக்க வேண்டிய எனது மகனின் வாழ்க்கையை அழித்து விட்டார். சேவாக், கம்பீர் போன்றவர்கள் கூட மற்றொரு யுவராஜ் சிங் பிறக்க முடியாது என்று கூறியிருந்தனர். புற்றுநோயுடன் நாட்டுக்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.