சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்புகிறது போயிங் ஸ்டார்லைனர்: நாசா

நியூ மெக்சிக்கோ: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.

இது குறித்த டைம்லைனை நாசா பகிர்ந்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆளில்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புறப்படும். அது சனிக்கிழமை அன்று நியூ மெக்சிக்கோவில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.34 மணி அளவில் விண்வெளி மையத்தில் இருந்து தானியங்கி முறையில் அன்-டாக் செய்து கொண்டு புறப்படும். அது சனிக்கிழமை காலை 9.33 மணி அளவில் பூமியை அடையும். இது ஸ்டார்லைனர் விண்கலன் சோதனையின் இறுதி கட்டமாக அமையும். இந்த நிகழ்வு முழுவதும் நேரலையில் ஒளிபரப்பாகும் என நாசா தெரிவித்துள்ளது.

விண்கலன் பூமி திரும்பியதும் நாசா விஞ்ஞானிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். கடந்த மாதமே ஆளில்லாமல் (Uncrewed) ஸ்டார்லைனர் பூமிக்கு கொண்டு வரும் முடிவை நாசா அறிவித்திருந்தது. தற்போது அதற்கான நேரத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர்.

அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் 90 நாட்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலனில் பூமிக்கு திரும்புகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.