மூடா விவகாரம்: சித்தராமையா மனு மீது கர்நாடகா ஐகோர்ட்டில் இன்று இறுதி விசாரணை

பெங்களூரு,

மைசூருவில் மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) லே-அவுட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. தன்னுடைய 3.16 ஏக்கர் நிலத்தை அந்த ஆணையம் அனுமதி இன்றி எடுத்துக் கொண்டதால், பார்வதிக்கு இந்த வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன.

இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இதுபற்றி தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (திங்கட்கிழமை) நீதிபதி நாகபிரசன்னா முன் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சித்தராமையா மற்றும் கவர்னர் தரப்பு வக்கீல்கள் வாதிட்டுள்ளனர். இன்றைய தினம் சித்தராமையா வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, மீண்டும் சில வாதங்களை எடுத்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.