வங்காளதேசம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவை சேர்ந்த கல்லூரி மாணவன் அஷனுல் ஹகி நேற்று சாலைவிபத்தில் படுகாயமடைந்தார். அவர் டாக்கா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அஷனுல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, சிகிச்சை அளித்ததில் டாக்டர்கள் அலட்சியம் காட்டியதாலேயே மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், ஆத்திரத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்களை உறவினர்கள் தாக்கினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று முதல் வங்காளதேசத்தில் நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர்கள் போராட்டத்திற்கு செவிலியர்களும் ஆதரவு அளித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும், மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்காளதேசத்தில் சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.