ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி,

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் இன்று இரண்டு இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

அதனைதொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணிக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். விகார் ரசூல் வாணி பனிஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதனைதொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு பகுதிக்குச் செல்கிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் மந்திரி குலாம் அகமது மிர்-ஐ ஆதரித்து மெகா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இவர் டூரு தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர் ஸ்ரீநகரில் இருந்து மாலை டெல்லி திரும்புகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.