காசா போரை கண்டித்து டென்மார்க்கில் போராட்டம் – கிரேட்டா தன்பெர்க் கைது

கோபன்ஹேகன்,

காசா முனையில் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து, டென்மார்க்கில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில், ‘ஆக்கிரமிப்புக்கு எதிராக மாணவர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில், சுவீடனைச் சேர்ந்த 21 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கலந்து கொண்டார். இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடனான கூட்டமைப்பை கோபன்ஹேகன் பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனவும், இனப்படுகொலைக்கு துணைபோகக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும், கைது செய்யப்பட்ட நபர்களில் கிரேட்டா தன்பெர்க்கும் ஒருவர் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.