ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுடெல்லி,

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என மெகபூபா முப்தி அறிவித்தார். அதேபோல பாஜக தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது. இதையடுத்து, அங்குள்ள அரசியல் கட்சிகள் சமீபத்தில் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.00 மணியளவில் வெளியிடவுள்ளார். இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் வரும் அமித்ஷா நாளை பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். மேலும் அங்கு அவர் வாகன பேரணியில் கலந்து கொண்டு உரையாட உள்ளார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பல முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க.வின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.