`திமுக, அதிமுக இரண்டுமே முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!' – கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இருப்பினும், இதுவரை எவ்வளவு முதலீடுகள் தி.மு.க கொண்டுவந்திருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க, தி.மு.க என இரண்டுமே பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும், அதற்கு தான் நடுவராக இருந்து செயல்படுவதாகவும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

ஸ்டாலின் – அமெரிக்கா

செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கை கோரிக்கை குறித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும் முதலீட்டுக்கான மாநாடு நடத்தினார்கள். அந்த மாநாட்டின்போது, எவ்வளவு முதலீடு வந்தது, அதனால் எத்தனை தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்பதை அவர் (எடப்பாடி பழனிசாமி) வெளியிட்டுவிட்டு இந்தக் கேள்வியைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

அதோடு, அ.தி.மு.க ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் கொண்டுவந்தார்கள் என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை அவர்கள் கொடுக்கட்டும், தி.மு.க ஆட்சியில் எவ்வளவு முதலீடு கொண்டுவந்தார்கள் என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை இவர்கள் கொடுக்கட்டும். இதை நடுவராக நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

கார்த்தி சிதம்பரம்

மேலும், இதே செய்தியாளர் சந்திப்பில் தேசிய கல்விக் கொள்கை விவகாரம் பற்றி பேசிய கார்த்தி சிதம்பரம், “தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கொண்டுவருகிறார்கள் என்பது மட்டுமே விவாதத்துக்கு வருகிறது. ஆனால், விஷமமான கருத்துகள், பிற்போக்கு சிந்தனையான கருத்துகளை மத்திய பா.ஜ.க முன்வைக்கிறார்கள் என்பது விவாதத்துக்கு வரவில்லை. அது விவாதப்பொருளாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை, புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததை நான் வரவேற்கிறேன். ஏற்றுக்கொள்ளவும் கூடாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.