வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது – ரிஷப் பண்ட்

மும்பை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரிலும், டி20 போட்டிகள் குவாலியர், டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆசிய நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற அணிகள் ஆசியாவில் நன்றாக விளையாடும் அணிகள் ஆகும்.

ஏனென்றால், அவர்களுக்கு இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைகள், சூழ்நிலைகள் நன்கு பழக்கப்பட்டிருக்கும். இந்திய அணி அதன் திறமைகளை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். எப்படி நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

எதிரணி யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் 100 சதவீதம் உழைப்பை கொடுத்து விளையாட வேண்டும். சர்வதேச தொடர்களில் அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். எந்த ஒரு தொடரையும் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விக்கான இடைவெளி மிகவும் குறைந்து விட்டது. அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.